ஆஸ்திரேலியாவின் முன்னணி வங்கிகளை ஏமாற்றி 600 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நாட்டிலுள்ள மிகப்பெரிய நிதி மோசடிக் குழுவொன்று மோசடி செய்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பல மில்லியன் டாலர் நிதி மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கு (Money Laundering) உதவிய குற்றத்திற்காக, பேங்க்ஸ்டவுன் (Bankstown) பகுதியிலுள்ள கணக்கியல் நிறுவனத்தின் (Accounting firm) இயக்குநர் மற்றும் இரண்டு கணக்காளர்கள் உட்பட மூவர் மீது காவல்துறை நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, போலி ஆவணங்கள் மூலம் $18 மில்லியனுக்கும் அதிகமான நிதியைப் சட்டவிரோதமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டு, நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, நியூ சவுத் வேல்ஸ் குற்றவியல் ஆணைக்குழு, ஆஸ்திரேலிய வரி அலுவலகம் மற்றும் பிற அதிகாரிகளின் உதவியுடன் சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள குறித்த கணக்கியல் நிறுவனத்தில் நேற்று பிற்பகல் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது, போலி ஆவணங்களைத் தயாரித்து $16.2 மில்லியன் கடனை மோசடியாகப் பெற்ற குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபரும், $15.6 மில்லியன் கடனைப் பெற்ற குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டு, அவர்களின் பிணை மனுக்கள் மறுக்கப்பட்டன. அதேபோல், $14.5 மில்லியன் கடன் மோசடியில் ஈடுபட்ட 28 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
'ஸ்ட்ரைக் ஃபோர்ஸ் மைடில்டன்' (Strike Force Myddleton) என்ற சிறப்புக் குழுவால் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
ஆரம்பத்தில், சொகுசு வாகனங்கள் இருப்பதாகப் போலி ஆவணங்களைக் காட்டி 'பேய் வாகனக் கடன்' (Ghost cars) பெற்ற குழுவை விசாரிக்கத் தொடங்கிய சிறப்புக் குழு, பின்னர் இந்த மோசடிக் குழுவின் கரங்கள் தனிநபர், வணிகம் மற்றும் வீட்டுக் கடன்கள் வரையிலான பிரம்மாண்ட விரிவடைந்திருப்பதை வெளிக்கொணர்ந்தது. இதுவரை 95 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் முன்னணி 'பிக் ஃபோர்' (Big Four) வங்கிகளான கொமன்வெல்த் வங்கி (Commonwealth Bank), நஷனல் ஆஸ்திரேலியா வங்கி (NAB), ஏ.என்.இஸட் (ANZ) மற்றும் வெஸ்ட்பேக் (Westpac) ஆகியவற்றில் சுமார் $500 மில்லியனும், ஏனைய சிறிய நிதி நிறுவனங்களில் $100 மில்லியனும் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
போலி நிதி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து இந்தக் கடன்களைப் பெற பேங்க்ஸ்டவுன் கணக்கியல் நிறுவனம் உதவியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மோசடிக் குழு, பெறப்பட்ட நிதியைக் கொண்டு சிட்னியின் கிழக்குச் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சொத்துக்களை மிக அதிக விலைக்கு வாங்கியுள்ளது. ஒரு சொத்தின் உண்மையான மதிப்பை விட 40% முதல் 50% வரை கூடுதல் விலையைக் காட்டி, வங்கியிடமிருந்து அதிக கடன் தொகையைப் பெற்றுவிட்டு, 'ரீபேட் பத்திரம்' (Deed of rebate) என்ற சட்ட ஒப்பந்தம் மூலம் விற்பனையாளரிடமிருந்து உபரிப் பணத்தை ரகசியமாகப் திரும்பப் பெற்றுக்கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் சொத்து மேம்பாட்டாளர்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த காவல்துறை, வங்கிகள் தங்களது முழுமையான இழப்பையும் ஈடுசெய்வது கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகள் முறையான பின்னணி ஆய்வுகளை மேற்கொள்வதில் தவறிவிட்டதாகவும், மதிப்பீடுகளைச் சரிபார்க்கத் தவறியமை தீவிரக் கண்காணிப்புக் குறைபாட்டைக் காட்டுவதாகவும் நிதிப் குற்றவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.