ஆஸ்திரேலிய சட்டத்துறையின் முன்னோடி நீதிபதியான மேரி காட்ரான் (Mary Gaudron), தனது 83-வது வயதில் காலமானதை அடுத்து, ஆஸ்திரேலிய சட்டத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பல தரப்பினரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1987-ஆம் ஆண்டு, தனது 44-வது வயதில் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட மேரி காட்ரான், 2003-ஆம் ஆண்டு வரை அப்பணியில் தொடர்ந்தார்.
அவரது மறைவை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் பல அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.
உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், ஆஸ்திரேலிய பழங்குடியினரின் நில உரிமை தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க 'மாபோ எதிர் குயின்ஸ்லேந்து' (Mabo vs Queensland) வழக்கு உட்பட, அந்நாட்டின் சட்டக் கட்டமைப்பை வடிவமைத்த பல முக்கியத் தீர்ப்புகளில் அவர் பங்களித்துள்ளார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பில், நீதிபதி மேரி காட்ரான் மற்றும் சக உயர் நீதிமன்ற நீதிபதியான வில்லியம் டீன் ஆகிய இருவரும், ஆஸ்திரேலிய பழங்குடியினரின் நிலங்கள் பறிக்கப்பட்டதை "இந்நாட்டின் வரலாற்றிலேயே மிக இருண்ட பக்கம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள மோரி (Moree) நகரில் 1943-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் திகதிபிறந்த மேரி காட்ரான், ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய சட்டத்துறையில் தடம் பதித்துச் சாதனைகளைப் படைத்தார்.
கார்ப்பரேட் உதவித்தொகை மூலம் சிட்னி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர், ஆரம்பத்தில் அவதூறு வழக்குகள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டப் பிரிவுகளில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
பின்னர், 1972-ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் பார் கவுன்சிலின் (NSW Bar Council) முதல் பெண் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
2003-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) இணைந்த அவர், அதன் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
முன்னதாக 2000-ஆம் ஆண்டில், பெண்களின் சமத்துவத்தைக் குறித்து அதிகாரத்தில் உள்ள சில சக்திவாய்ந்த ஆண்களின் உண்மை மனநிலையை அவர் வெளிப்படையாக விவரித்திருந்தார்.
"ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாத, சமத்துவத்தை நல்ல விஷயமாகக் கருதாத, தொழில்முறைத் துறைகளில் பெண்களின் சமமான பங்களிப்பைக் கண்டு அச்சப்படுகிற மனிதர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்," என்று அவர் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டின் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், "ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் மேரி காட்ரான்.
அந்த நீதிமன்றத்தின் முதல் நூற்றாண்டில் பணியாற்றிய ஒரே பெண் நீதிபதியான அவர், புதிய பாதையை அமைத்துக் கொடுத்து, பல தலைமுறை ஆஸ்திரேலியர்கள் சட்டத்துறை மற்றும் பொதுச்சேவையில் தடம்பதிக்க ஊக்கமாகத் திகழ்ந்தார்.
அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் பயணிக்கும் எண்ணற்ற மக்களின் மூலம் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
சமூக சேவைகள் துறை அமைச்சர் டாண்யா பிளிபர்செக் கூறுகையில், "மேரி காட்ரான் ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பையே மாற்றி அமைத்தார். பெண்களுக்கான சம ஊதியத்திற்காகப் போராடியதுடன், சட்டத்துறையில் பெண்களுக்கான தடைகளைத் தகர்த்தெறிந்தார். அவரது கூர்மையான அறிவும் துணிச்சலும் நமது நாட்டை மேலும் நீதியானதாக மாற்றியது," என புகழாரம் சூட்டியுள்ளார்.