பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணி ஆகியோரின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்திரேலிய போர் நினைவிடத்துக்கு அருகில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர், பூர்வக்குடி மக்கள் மற்றும் பாலஸ்தீனர்களின் கொடிகளை ஏந்தி இருந்தனர்.
இனப்படுகொலையென்பது பெருமைக்குரிய விடயமல்ல எனவும், பூர்வக்குடி மக்களுக்குரிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் இன்று கன்பராவுக்கு வருகை தந்தனர்.
போர் நினைவிடத்தில் படையினருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை முன்னிட்டே சிலரால் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுயாதீன செனட்டர் Lidia Thorpe இதில் பங்கேற்றிருந்தார்.
போராட்டக்காரர்களை கலைப்பதற்குரிய நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிஸாருடன் செனட்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது பொலிஸார் அவரின் சட்டையை பிடித்தனர். இதனையடுத்து சட்டையை கழற்றி எரிந்துவிட்டு அவர் வெளியேறினார்.
அதேவேளை, போர் நினைவிட வளாகத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டு, மன்னர் மற்றும் ராணிக்கு வரவேற்பளித்தனர்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கும் அரச குடும்பத்தினர் இன்று கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.