ஆஸ்திரேலியாவில் குடிவரவு விதிகளைக் கடுமையாக்கும் அரசின் நடவடிக்கை, விவசாயத் துறையில் தீவிர ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, வரவிருக்கும் கோதுமை அறுவடைகளைப் பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என வணிக அமைப்புகளும் எச்சரித்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் ஆளும் லேபர் கட்சி அரசாங்கம், ஆண்டுதோறும் நாட்டிற்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் பல்லாயிரக்கணக்கில் குறைப்பதற்காகப் பல்வேறு புதிய நடவடிக்கைகளை வியாழக்கிழமை அறிவித்தது.
புதிய விதிகளின்படி, வேலைப்பயண விசாவில் (working holiday maker visa) வரும் பயணிகள், தங்களது தங்கலை இரண்டு அல்லது மூன்றாவது ஆண்டிற்கு நீட்டிப்பதைக் கட்டுப்படுத்த 'குலுக்கல் முறை' (ballot system) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
'பேக்பேக்கர் விசா' (backpacker visas) என்றும் அழைக்கப்படும் இந்த விசாக்கள், கிராமப்புறங்களில் உள்ள விவசாயப் பண்ணைகள், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளால் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், இந்த விசாக்களுக்கான பரிசீலனை காலம், முன்பு சில நாட்களாக மட்டுமே இருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதி நாடாகவும், கடுகு எண்ணெய் வித்துக்கள் (canola), பார்லி, மாட்டிறைச்சி மற்றும் ஒயின் போன்ற பொருட்களின் முக்கிய விநியோகஸ்தராகவும் திகழ்கிறது.
பண்ணைப் பணிகளில் ஏழில் ஒரு பங்கு பணியிடங்கள் இந்த விசா மூலம் வரும் பணியாளர்களாலேயே நிரப்பப்படுவதாகவும், கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படும் அறுவடைக் காலங்களில் சில பகுதிகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய தேசிய விவசாயிகள் சம்மேளனம் (NFF) தெரிவித்துள்ளது.
வேலைப்பயண விசாக்களை வழங்குவதில் அரசாங்கம் ஏற்கனவே தாமதப்படுத்தி வருவதால், சில பண்ணைகளில் போதுமான பணியாளர்கள் இல்லை என்று NFF தலைவர் ஹேமிஷ் மெக்கின்டைர் தெரிவித்தார்.
"விவசாயிகளுக்கு விசா ஒப்புதல்கள் சில நாட்களில் தேவை, மாதக்கணக்கில் அல்ல. பல பண்ணைகளுக்கு, பயிரைச் அறுவடை செய்வதற்கும் அதை இழப்பதற்கும் இடைப்பட்ட நேரமே இந்த மூன்று மாதங்கள்தான்," என்று கூறிய அவர், ஆள் பற்றாக்குறையால் உற்பத்தி குறைந்து விலை உயரக்கூடும் என்றும் சேர்த்துக் கூறினார்.
கோதுமை உள்ளிட்ட குளிர்காலப் பயிர்களின் அறுவடை வரும் வாரங்களில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.
"பயிர்கள் அழுகிப் போவதற்கும், தொலைதூர வணிகங்கள் இயங்க முடியாமல் போவதற்கும் உண்மையான ஆபத்து உள்ளது" என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவுக்கான நிழல் அமைச்சருமான சூசன் மெக்டொனால்டு கூறினார்.
நாட்டின் எல்லைகளைக் கடுமையாக்குமாறு வலதுசாரி 'ஒன் நேஷன்' கட்சியின் அழுத்தம் அதிகரித்து வருவதால், பிரதமர் அந்தோணி அல்பானீஸின் அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சமீபத்திய கருத்துக் கணிப்புகளில், வாக்காளர்களின் முக்கிய கவலைகளில் குடியேற்றப் பிரச்சினையும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அரசின் புதிய திட்டத்தில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
"தற்போது இந்த நாட்டின் மூன்றில் ஒரு தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது," என்று ஆஸ்திரேலிய வணிக கவுன்சிலின் தலைமை நிர்வாகி பிரான் பிளாக் தெரிவித்தார்.
"வீடுகள் கட்டுவதற்கும், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் பராமரிப்பதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்பதையே இது காட்டுகிறது. எந்தவொரு குடியேற்றக் கொள்கையும் இந்தச் சவாலைத் தீர்ப்பதாகவே இருக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
கோவிட்-19 காரணமாக இரண்டு ஆண்டுகள் மூடப்பட்டிருந்த எல்லைகள் பிப்ரவரி 2022 இல் திறக்கப்பட்ட பிறகு, ஆஸ்திரேலியாவிற்கான குடியேற்றம் பெருமளவில் அதிகரித்தது. சர்வதேச மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தனர்.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. செப்டம்பர் 30, 2023 உடன் முடிவடைந்த ஆண்டில் அதிகபட்சமாக 5,56,000 ஆக இருந்த நிகர வெளிநாட்டு குடியேற்றம், ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த ஆண்டில் 3,06,000 ஆகக் குறைந்துள்ளது.