" நான் சுயாதீன செனட்டர், என்னை எவராலும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற முடியாது. மக்களுக்கான எனது குரல் ஓங்கி ஒலிக்கும்" என்று சூளுரைத்துள்ளார் சுயாதீன செனட்டர் Lidia Thorpe.
பிரிட்டிஷ் மன்னர் மற்றும் ராணி ஆகியோர் ஆஸ்திரேலிய பயணத்தின்போது நாடாளுமன்றத்துக்கும் வருகை தந்தனர்.
இதன்போது மன்னருக்கு எதிராக சுயாதீன செனட்டர் Lidia Thorpe போராட்டத்தில் ஈடுபட்டார். நீங்கள் எனது மன்னர் அல்லர் எனவும் அவர் கோஷம் எழுப்பினார்.
இச்சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தினதும் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனையடுத்து கடும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டுவருகின்றார்.
அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
மன்னருக்கு விசுவாசமாக செயற்படுவோம் என பதவியேற்கும்போது வழங்கிய உறுதிமொழியை மீறியுள்ளார் எனவும், எனவே, அவரை பதவி நீக்கம் செய்யலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே தன்னை எவரும் வெளியேற்ற முடியாது என Lidia Thorpe அறிவித்துள்ளார் .
அடுத்த மூன்றாண்டுகளுக்கு பதவியில் தொடர்வேன் எனவும், மக்களுக்கு நிறைய செய்யவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை Lidia Thorpe செனட்டில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்பதை உயர்நீதிமன்றம் தற்போது தீர்மானிக்க முடியும் என்று அரசமைப்பு நிபுணர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.