ஆஸ்திரேலிய அரசாங்கம், புகலிடக் கோரிக்கையாளர்களை 90 நாட்களுக்கு மேலாக தடுத்து வைப்பதை சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதவேண்டும் எனக்கோரும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சுயாதீன செனட்டர் Kylea Tink என்பவரால் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி குழந்தைகள் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்படுவதும் சட்டவிரோத நடவடிக்கையாக கருதப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
“ ஆஸ்திரேலியாவானது சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகவே சட்டதிருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் Kylea Tink குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகளை பாதுகாப்பதில் ஆஸ்திரேலியாவுக்கு உலகளவில் மோசமான பெயரே உள்ளது எனவும், இந்நிலை மாற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் 900 வரையானோர் தடுப்பு மையங்களில் உள்ளனர் என தெரியவருகின்றது.