குடியேற்றக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கணுக்கால் வளையம் பொறுத்தப்பட வேண்டும், ஊரடங்கு உத்தரவு நிபந்தனையின்கீழ் அவர்கள் வாழ வேண்டும் என்பது தொடர்பான சட்டப் போராட்டத்தில் கூட்டாட்சி அரசு தோல்வி அடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமூக பாதுகாப்பு முக்கியம் என்பதால் மேற்படி நடைமுறைகள் சட்டப்பூர்வமானது என அரசாங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
காலவரையற்ற குடியேற்றக் காவல் சட்டவிரோதம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், குடியேற்றக் காவலில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனவே, அவர்களை கண்காணிப்பதற்குரிய அரசாங்கத்தின் ஏற்பாடு சட்டவிரோதம் என பாதிக்கப்பட்ட தரப்புகளின் சட்டத்தரணி சார்பில் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்படியான விதிமுறைகளை நீதிமன்றமே விதிக்க வேண்டும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், கூட்டாட்சி அரசாங்கத்தின் நடைமுறை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பானது ஆஸ்திரேலியாவில் அடிப்படை சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு கிடைக்கப்பெற்ற வெற்றியாகும் என்று அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.