ரஷ்ய, உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்றுவருகின்றது. இந்தப் போரில் இதுவரை 659 குழந்தைகள் பலியாகியுள்ளனர். 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக, ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது கண்மூடித் தனமாக போர் தொடுத்து வருகிறது.
இந்நிலையில் யுனிசெப் அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோடிக்கணக்கான குழந்தைகள் தொடர்ச்சியான தாக்குதல்களால் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். உணவு, மின்சாரம், குடிநீர் மற்றும் பிற தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐ.நா. சாசனத்தை மீறும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பிடித்துள்ள ரஷ்யா செயற்பட்டுவருகின்றது என்று ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வலிகள் மற்றும் சோகத்துடன் 1000 நாட்கள் கடந்துள்ளன. சுதந்திரத்துக்காக போராடும் உக்ரைன் மக்களுக்கு பக்கபலமாக நிற்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.