கடந்த வருடம் ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது எனவு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 ஆம் திகதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே மேற்படி அறிக்கை வெளியாகியுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடுதான் மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
உலகளவில், 2023 ஆம் ஆண்டில் தோராயமாக 51,100 பெண்கள், சிறுமிகளின் உயிரிழப்புக்கு இணையர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 48,800 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டில் 21,700 பேர் தங்களது இணையர் மற்றும் உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்கா மக்கள்தொகையின் அளவோடு ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.