தேசிய பாதுகாப்பு, கடல்சார் அலுவல்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கம் உள்ளிட்ட துறைகளில் ஆஸ்திரேயாவிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீவன், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது இது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் 75 வருட உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளை மேலும் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு, கடல்சார் அலுவல்கள்,டிஜிட்டல் மயமாக்கம்,அரச துறை நவீனமயப்படுத்தல்,தொழில் கல்வி, வலுசக்தி உள்ளிட்ட துறைகளில் அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை பாராட்டிய ஆஸ்திரேலிய தூதுவர், அதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.