பல மில்லியன் டாலர்கள் செலவில் ஆஸ்திரேலியாவிற்கு கொக்கைன் இறக்குமதி செய்ய முற்பட்ட 13 பேர் பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் வழியாகவே 2.34 டன் கொக்கைனை இறக்குமதி செய்வதற்குரிய ஏற்பாடு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் 11 ஆண்கள் மற்றும் இரு சிறார்கள்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வரலாற்றில் டன் கணக்கில் கொக்கைன் இறக்குமதிக்கு இடம்பெற்றுள்ள முதல் முயற்சி இதுவாகும் எனக் கூறப்படுகின்றது. கப்பல்மூலம் குயின்ஸ்லாந்துக்கு போதைப்பொருளை கொண்டுவருவதற்கும், அதனை கரையில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு குழுவொன்று தயார் நிலையில் இருந்துள்ளது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெடரல் பொலிஸார் மற்றும் குயின்ஸ்லாந்து பொலிஸார் இணைந்து முன்னெடுத்த கூட்டு பாதுகாப்பு பொறிமுறையின் பிரகாரமே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர் எனக் கூறப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோத போதைப்பொருள் இறக்குமதி செய்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது. அவ்வாறான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கைது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் உரிய விசாரணைகளின் பின்னர் அழிக்கப்படவுள்ளது. இதன்பெறுமதி 750 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.