போர் காரணமாக சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிவந்துள்ள பாலஸ்தீனர்களுக்கு சிறப்பு சேவைகளை வழங்குமாறு புதிய உள்துறை அமைச்சர் Tony Burke இற்கு அழுத்தங்கள் அதிகரித்துவருகின்றது.
ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கும், உக்ரேனியர்களுக்கும் வழங்கப்படுவதுபோல் ஒரு சிறப்பு மனிதாபிமான பாதை காசாவில் இருந்து தப்பி வந்தவர்களுக்கும் திறக்கப்பட வேண்டும் என்று பாலஸ்தீன சமூகம் லேபர் அரசை வலியுறுத்திவருகின்றது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரையடுத்து ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் 1,200 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள், சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியா வந்துள்ளனர்.
ஒக்டோபர் 7 முதல் 10 மாத காலப்பகுதிக்குள் விண்ணப்பிக்கப்பட்ட 7,000 சுற்றுலா விசாக்களில் ஒரு பகுதியே இது, மே மாத இறுதியில் 4,600 இற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 2,400 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
2022 ஏப்ரல் 8 முதல் 2022 ஜுலை 31 வரையான காலப்பகுதிக்குள் 4,877 உக்ரேனியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு தற்காலிக மனிதாபிமான விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. சொற்ப அளவான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் பாலஸ்தீனத்தில் இருந்து வருபவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே, பாலஸ்தீனர்கள் விவகாரத்தையும் மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.