ஈரானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. மத்திய கிழக்கு விவகாரத்தில் தமது நாடுமீது மட்டும் விமர்சனங்களை முன்வைக்கும் கன்பராவின் அணுகுமுறை குறித்து ஈரான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை அதிகரிக்கும் வகையில் ஈரான் செயற்படுகின்றது என்று ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், மத்திய கிழக்கை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருங்கள் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையில் யூதர்களை விமர்சித்திருந்த தமது நாட்டுக்கான ஈரான் தூதுவரை அழைத்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு விளக்கமும் கோரி இருந்தது.
இந்நிலையில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு இரகசியமாக ஆதரவு வழங்கும் வகையிலேயே ஆஸ்திரேலியா தமது நாட்டை குறிவைத்து செயற்படுகின்றது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசா விவகாரத்தில் ஆஸ்திரேலியா இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடித்துவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.