மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியிலுள்ள யூத வழிபாட்டு தலத்துக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யூத விரோத வன்முறைச் சம்பவத்தை பிரதமர் அந்தோனீ அல்பானீஸி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இன்று அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகமூடி அணிந்திருந்த இருவரே இந்த நாசகார செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
17 தீயணைப்பு வாகனங்கள் சகிதம் 60 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கடும் போராட்டத்துக்கு மத்தியில் தீ பரவல் நிறுத்தப்பட்டது. எனினும், பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தை பிரதமர் வன்மையாகக் கண்டித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடமில்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டனும் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.
யூத வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யூத சமூகத்துடன் கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில பிரீமியர் குறிப்பிட்டுள்ளார்.