சிரியாவை கிளர்ச்சி படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து ரஷ்யாவுக்கு தப்பியோடிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு, அங்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதை ரஷ்ய அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971 இல் இராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார்.
29 ஆண்டுகள் சிரியா ஜனாதிபதியாக இருந்த அவர் 2000 ஆம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் திகதி ஜனாதிபதியானார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்தன. கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி, அமெரிக்கா ஆதரவு அளித்தன. கடந்த 2014-ல் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. ஜனாதிபதி ஆசாத் படைகள் கிளர்ச்சி படைகள் இடையிலான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
பின்னர், ரஷ்யா, ஈரானின் ஆதரவால் ஜனாதிபதி ஆசாத்தின் கை ஓங்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் போரை தொடர்ந்து, சிரியா ஜனாதிபதி ஆசாத்தின் இராணுவத்துக்கு ரஷ்யா, ஈரானின் ஆதரவு படிப்படியாக குறைந்தது.
இதற்கிடையே, சன்னி பிரிவை சேர்ந்த ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் (எச்டிஎஸ்) என்ற கிளர்ச்சி குழு வளர்ச்சி அடைந்தது. அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இந்த கிளர்ச்சி குழுவுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. கடந்த நவம்பர் 27-ம் திகதி சிரியா இராணுவத்துக்கு எதிராக மிகப் பெரிய போரை எச்டிஎஸ் கிளர்ச்சி படை தொடங்கியது.
இதனையடுத்து சிரியா ஜனாதிபதி தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சிரியாவில் ஆட்சி அதிகாரத்தை கிளர்ச்சிப்படை கைப்பற்றியுள்ளது.
' சிரியாவில் நடக்கும் நிகழ்வுகளை லேபர் அரசாங்கம் கண்காணித்து வருகிறது. சிரியாவில் அசாத் ஆட்சியின் முடிவுக்கு யாரும் இரங்கல் தெரிவிக்க மாட்டார்கள். நாங்கள் அங்கு அமைதியை விரும்புகிறோம். மேலும் சிரியா ஒரு அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெற முடியும்." என்று ஆஸ்திரேலிய நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அசாத் ஆட்சியின்வீழ்ச்சி , சிதைக்கப்பட்ட சிரிய மக்களுக்கு, பயங்கரமான யுகத்தின் முடிவாக அமைய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை பாதுகாக்கவும், வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவரவும் கலந்துரையாடலுக்கு முன்னுரிமை வழங்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சபா.தயாபரன்.