"பாலி நைன்" என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் எஞ்சிய ஐந்து உறுப்பினர்களும் இந்தோனேசியாவில் இருந்து , கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் ஆஸ்திரேலியா வருவதற்குரிய சாத்தியம் உள்ளது எனக் கூறப்படுகின்றது.
டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன் இவர்களை ஆஸ்திரேலியா அனுப்புவதற்கு தமது நாட்டு ஜனாதிபதி விரும்புகின்றார் என்று இந்தோனேசிய நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐந்து கைதிகளையும் மாற்றுவதற்கான ஒப்பந்தத்தின் வரைவு நகர் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிடம், இந்தோனேசியா கையளித்தது.
இந்தோனேசிய இறையாண்மையை ஆஸ்திரேலியா மதிக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும், கைதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது விடயத்தில் ஆஸ்திரேலியாவின் பதிலுக்காக இந்தோனேசியா காத்திருக்கின்றது. இதற்கு ஆஸ்திரேலியா இணங்கினால் விடுவிப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என இந்தோனேசிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து ஆஸி. திரும்பும் கைதிகள் இங்கு சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். எனினும், ஆஸ்திரேலியா அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினால் அந்த முடிவை இந்தோனேசியா மதிக்கும் எனவும் அந்நாட்டு நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெரோயின் கடத்த முற்பட்ட ஆஸ்திரேலியர்கள் 2005 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐவர் தற்போது பாலி சிறைச்சாலையில் உள்ளனர்.
ஆன்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோருக்கு 2015 இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.