சீன தொழிலதிபரைக் கடத்தி அவரை சித்திரவதைகளுக்குட்படுத்தி கப்பம் பெற முற்பட்ட மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
30, 33 மற்றும் 59 வயதுகளுடைய நபர்களுக்கே மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தால் இன்று இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வணிக ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடும் நோக்கி 60 வயது சீன தொழில் அதிபர் ஒருவர், 2023 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பேர்த்துக்கு வந்துள்ளார்.
இவரை கடத்திய கும்பலொன்று அவரை 50 மணிநேரம் தடுத்து வைத்து சித்திரவதை செய்துள்ளது. அவரை கடத்தும் நோக்கிலேயே குறித்த கும்பல் பேர்த்துக்கு வரவழைத்துள்ளது.
குறித்த தொழில் அதிபரின் குடும்ப உறுப்பினருக்கு அழைப்பை ஏற்படுத்தி பெருமளவு பணத்தை கப்பமாகவும் கடத்தல் கும்பல் கோரியுள்ளது.
அத்துடன், சீன உளவாளி என தொழிலதிபரிடம் கட்டாயப்படுத்தி கையொப்பமும் பெற்றுள்ளனர். தாம் கோரும் பணத்தை வழங்காவிடின் அவை பகிரங்கப்படுத்தப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழில் அதிபரின் குடும்பத்தார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இவ்வழக்கு விசாரணையிலேயே சந்தேக நபர்கள் மூவரில் இருவருக்கு 8 ஆண்டுகளும், ஒருவருக்கு ஆறு ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.