தென்பசுபிக் தீவு நாடான வனாட்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு 7.3 ரிக்டராக அமைந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தையடுத்து நியூசிலாந்து உட்பட வனாட்டு தீவை அண்மித்த நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் இன்று முற்பகல் அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் 57 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தையடுத்து இராட்சத அலைகள் உருவாகிய நிலையிலேயே சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அதேவேளை, வனாட்டு நாட்டில் உள்ள ஆஸ்திரேலியர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்தால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், வனாட்டு தீவுக்கு செல்வது பற்றி மீள்பரிசீலனை செய்யுமாறும் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வனாட்டு நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுவருகின்றது, அந்நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு ஆஸ்திரேலியா தயாராக உள்ளது என வெளிவிவகார அமைச்சர் பெனிவோங் குறிப்பிட்டுள்ளார்.