சீன இராணுவத்துக்கு சட்டவிரோதமாக உதவினார் எனக் முன்னாள் விமானியை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு ஆஸ்திரேலியா ஒப்புதல் அளித்துள்ளது.
அவர் அமெரிக்கா சென்ற பிறகு அங்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் 60 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
அமெரிக்க போர் விமானியாக பணியாற்றிய 56 வயதுடைய ஆஸ்திரேலிய குடும்பஸ்தர் டேனியல் டுக்கன் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.
சீன இராணுவத்துக்கு சட்டவிரோதமாக பயிற்சியளித்தார் என்ற குற்றத்துக்காக அவர் ஏற்கனவே இரு வருடங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவரை நாடு கடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
'நாங்கள் ஆஸ்திரேலிய அரசால் கைவிடப்பட்டதாக உணர்கின்றோம். ஆஸ்திரேலியக் குடும்பத்தை பாதுகாப்பதில் அரசு தவறிழைத்துள்ளமை குறித்து கவலை அடைகின்றோம்."- என்று டேனியலின் மனைவி தெரிவித்துள்ளார்.
2010 மற்றும் 2012 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தென்னாபிரிக்காவில் உள்ள சீன விமானிகளுக்கு பயிற்சி அளித்த குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் உத்தரவின் பிரகாரம் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.