ஆஸ்திரேலியாவில் யூத விரோத சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சிட்னியிலுள்ள யூதத் தலைவர் ஒருவரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிட்னியின் கிழக்கு பகுதியிலுள்ள டோவர் ஹைட்ஸில் உள்ள வீடே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இரு கார்கள் கொளுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவர் பகுதிகளில் பெயின் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிறிஸ் மின்ஸ், யூத எதிர்ப்பு நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்வதற்குரிய விசாரணையை நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
அதேவேளை, பிரதமர் அந்தோனீ அல்பானீஸி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் ஆகியோர் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இதற்கிடையில் யூத எதிர்ப்பு சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கு தேசிய அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.