பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என அவர் வர்ணிக்கப்படும் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ வெற்றிபெற்றுள்ள நிலையில், அங்கு நீதியான முறையில் தேர்தல் நடக்கவில்லை என ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய சகாவான அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ , 1994 ஆம் ஆண்டு முதல் பெலாரஸ் நாட்டை ஆண்டுவருகின்றார். இம்முறையும் அவரே ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ளார்.
அவரின் ஆட்சியின்கீழ் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன எனவும், மாற்று கருத்துடைய அரசியல் வாதிகள் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனவும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் அங்கு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து கூட்டறிக்கையொன்றை விடுத்துள்ளன.
பெலாரஸில் அடக்குமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் இடித்துரைக்கப்பட்டுள்ளது.
பெலாரஸ் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அந்நாட்டு மக்களுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் எனவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.