நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தார் எனவும், யூத எதிர்ப்பு கருத்துகளை முன்வைத்துள்ளார் எனவும் இளைஞர் ஒருவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மெல்பேர்ணை சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவருக்கு எதிராகவே பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விக்டோரிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விரு சம்பவங்களுக்காக அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
ஜனவரி 16 மற்றும் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சமூகவலைத்தளம் ஊடாக நியூ சவூத் வேல்ஸில் உள்ள கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். யூத எதிர்ப்பு கருத்துகளையும் முன்வைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அதே மாதத்தில் விக்டோரிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் குறித்த இளைஞன் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவரின் வீட்டில் இருந்து மின்னணு சாதனங்களை மீட்டனர்.
குறித்த நபருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.