போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ஹமாஸ் அமைப்பு, பயணக் கைதிகள் விடுதலையை தாமதப்படுத்தியுள்ளது.
அடுத்த பணயக் கைதிகள் குழுவினர், எதிர்வரும் சனிக்கிழமை விடுவிக்கப்படவிருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
வடக்கு காசாவுக்கு பாலஸ்தீனியர்கள் திரும்புவதை இஸ்ரேல் தாமதப்படுத்துகிறது என்றும் பாலஸ்தீனியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதாகவும் ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், இக்குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்குவரும் நிலையில், இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கத்தாரில் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் போர் மீள ஆரம்பிப்பதற்கு தயாராகுமாறு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், இராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.
இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.
அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள நடைமுறைகளை இரு தரப்பும் பின்பற்ற வேண்டும் என்று ஆஸ்திரேலியா ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பணயக் கைதிகள் விடுதலையையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும் எனவும், பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சபா.தயாபரன்