இரும்பு மற்றும் அலுமினியம்மீதான வரி தொடர்பில் ஆஸ்திரேலியாவால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் இருப்பு மற்றும் அலுமினியம்மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா வருடாந்தம் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான இரும்பு மற்றும் அலுமியனத்தை ஏற்றுமதி செய்துவருகின்றது. எனவே, ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஆஸி, பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்நிலையில் வரி விலக்கை பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியுடன், பிரதமர் அந்தோனீ அல்பானீஸி தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றுள்ள கலந்துரையாடலில், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. வரி விலக்கு தொடர்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நலன்களை முன்னேற்றுவதற்கும், பொருளாதார செழிப்பை ஊக்குவிப்பதற்கும், சவால்களை எதிர்கொள்வதற்கும் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று தனது எக்ஸ் தளத்தில் மேற்படி கலந்துரையாடல் தொடர்பில் ஆஸி. பிரதமர் பதிவிட்டுள்ளார்.
பிராந்திய அமைதி உள்ளிட்ட விடயங்களில் ட்ரம்புடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.