" உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" - என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
2022 பெப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. இப்போர் இன்றுடன் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து வருகிறது.
இந்தப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. தற்போது போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது.
இதற்கிடையே, 'உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சர்வதிகாரி. இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார்', என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.
அதேவேளை, ஆஸ்திரேலியா உக்ரைனுக்காக தொடர்ந்து துணை நிற்கும் என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் இன்று தெரிவித்தார்.
ரஷயாவின் சட்டவிரோதப் போரை உக்ரைன் துணிச்சலுடன் எதிர்கொள்கின்றது எனவும், ரஷ்யாவின் மிருகத்தனமான தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.