நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் வாகன கடத்தலில் ஈடுபட்ட சிறார்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளார்.
பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்காதிருக்க, களவாடப்பட்ட வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நரோமையில் வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து நேற்றிரவு 11 மணியளவில் வாகனமொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பிறகு தேடுதல் வேட்டை ஆரம்பமானது. மிட்செல் நெடுஞ்சாலையில் வாகனம் அடையாளம் காணப்பட்ட பின்னர், அதனை பொலிஸார் மடக்கி பிடிக்க முற்பட்டனர்.
வாகனம் வேகமாக செல்ல அதனை பொலிஸார் துரத்த ஆரம்பித்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் வாகனம் விபத்துக்குள்ளானது.
களவாடப்பட்ட வாகனத்துக்குள் இருந்த 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 13,14 மற்றும் 16 வயதுகளுடைய சிறார்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 வயது சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.