கன்பரா, பங்கென்டோர் பகுதியில் கொள்ளையடித்துவிட்டு, பொலிஸ் காரில் ஏறி தப்பிச்சென்றுள்ள நபரை பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மேற்படி பகுதியிலுள்ள வணிக நிறுவனத்தில் இன்று அதிகாலை கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்பின்னர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்கு முற்பட்டனர். எனினும், அந்நபர் வெளியில் இருந்த பொலிஸ் காரை ஓட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
பொலிஸாரை நோக்கி அவர் வேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளார். இதன்போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸ் கார் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அந்நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றுவருகின்றது.