மெல்பேர்ணில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவத்துடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெல்பேர்ண் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் வேட்டையின்போதே 15 வயது சிறுவன் உட்பட 13 பேர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இரு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாகவே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது.
கைதானவர்கள் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட இளைஞர்களாவர் என தெரியவந்துள்ளது.
24 வயதான இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் அவரது சகோதரனும் குழு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவந்துள்ளது.