ஆஸ்திரேலியாவில் வொம்பாட் விலங்கிடமிருந்து அதன் குட்டியை பிரித்த தனது செயலுக்காக அமெரிக்க யுவதி மன்னிப்பு கோரியுள்ளார்.
' மேற்படி சம்பவம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. மேலும் இந்த சூழ்நிலையை நான் எவ்வளவு சிறப்பாகக் கையாள வேண்டும் என்பதை உணர்ந்தேன்" எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வொம்பாட் குட்டியை எடுத்தபோது அதன் தாய் தாக்கும் என்ற அச்சத்திலேயே ஓடினேன், மாறாக தாயையும், குட்டியையும் பிரிக்க முற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
' இவ்வளவு அற்புதமான விலங்கைப் பார்த்து நம்பமுடியாத அளவுக்கு உற்சாகமாக இருந்தபோது, அதை விரைவாகப் பார்த்துவிட்டு உடனடியாக அதன் தாயிடம் திருப்பிக் கொடுத்தேன்.
தாயும் குட்டியும் மீண்டும் ஒன்றிணைவதையும், ஒன்றாகச் செல்வதையும், அவர்கள் சாலையிலிருந்து விலகிச் செல்வதையும் நான் உறுதிசெய்தேன்." - எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் ஒருபோதும் லைக்குகளைப் பெறுவதற்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மட்டுமே வொம்பாட் என்ற பாலூட்டி விலங்கு காணப்படுகின்றது. இந்த விலங்கு குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் அரியவகை விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் சாம் ஜோன்ஸ். இளம்பெண்ணான இவர் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அது தொடர்பான வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார்.
இவர் தனது தாயாருடன் கடந்த சில நாட்களுக்குமுன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் சாம் ஜோன்ஸ் தனது தாயாருடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது, வனப்பகுதியில் வொம்பாட் விலங்கு தனது குட்டியுடன் சாலையை கடந்துள்ளது.
இதைப்பார்த்த சாம் ஜோன்ஸ் காரில் இருந்து இறங்கிய வொம்பாட் குட்டியை பிடித்துள்ளார். தாயிடமிருந்து பிரிந்த வொம்பாட் குட்டி கத்தியுள்ளது.
வொம்பாட் குட்டியை தேடி அதன் தாய் சாம் ஜோன்சின் காரை நோக்கி வந்துள்ளது. ஆனால், அந்த தாய் வொம்பாட்டை சாம் ஜோன்ஸ் விரட்டியுள்ளார். பின்னர், வொம்பாட் குட்டியை சாலையோரம் வனப்பகுதியில் ஜோன்ஸ் விட்டார். பின்னர், அந்த குட்டி வனப்பகுதியில் ஓட்டியது.
இந்த நிகழ்வை தனது சொல்போனில் வீடியோவாக எடுத்த சாம் ஜோன்ஸ் அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இது ஆஸ்திரேலியாவில் பெரும் பேசுபொருளானது. அரியவகை உயிரினமான வொம்பாட்டை தனது குட்டியிடமிருந்து பிரித்தது, குட்டியை தனியே வனப்பகுதியில் விட்டது தொடர்பாக சாம் ஜோன்சுக்கு கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, ஜோன்ஸ் மற்றும் அவரின் தாயார் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறினர்.
அவருக்கு மீண்டும் விசா வழங்கப்படமாட்டாது என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.