இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட கலந்துரையாடல் கன்பராவில் இன்று ஆரம்பமானது.
அத்துடன், இருநாட்டு மூலோபாய சமூத்திர கலந்துரையாடலின் மூன்றாம் கட்ட கூட்டமும் ஆரம்பமாகியுள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் இன்றும், நாளையும் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
மேற்படி இரு கூட்டங்களுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் யசோஜா குணசேகர மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் முதல் உதவிச் செயலாளர் சாரா ஸ்டோரி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
அரசியல் ஈடுபாடு, பொருளாதார கூட்டாண்மை, கடல்சார் ஒத்துழைப்பு, மேம்பாட்டு கூட்டாண்மை, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான ஈடுபாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி கலந்துரையாடல் 2023 ஜுன் மாதம் நடைபெற்றிருந்தது. இதன் போது இரு தரப்பினரும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் விளையாட்டுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை உறுதிப்படுத்தினர்.