' வடக்கு மக்களின் காணி உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிப்படுத்தும். எனவே, சில விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாயையை தோற்றுவிக்கின்றார்." -என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., அரசாங்கம்மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
' அரசாங்கமும், இராணுவமும் இணைந்து வடக்கில் இனவாதத்தை பரப்புவதாக கஜேந்திரகுமார் எம்.பி. குற்றஞ்சாட்டினார். இனவாதத்தை தோற்கடித்த அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
அதேபோல வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்த அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். எனவே, இந்நாட்டில் இனவாதத்துக்கு மீண்டும் இடமளிக்கப்படமாட்டாது." - எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சில காரணங்கள் தொடர்பில் மாயையை தோற்றுவிக்க முற்படுகின்றனர். கடந்த காலங்களிலும் இப்படி நடந்துள்ளது.
எமது நாட்டில் காணிகளை கையகப்படுத்திய அரசியல்வாதிகள் பற்றியும் எதிர்காலத்தில் நாம் கதைப்போம். காணிகளை கையகப்படுத்தி நண்பர்களுக்கு விற்றவர்கள் உள்ளனர். வடக்கிலும் அப்படி நடந்துள்ளது.
வடக்கு மக்களுக்கான காணி உரிமை உறுதிப்படுத்தப்படும். அவர்களுக்குரிய காணியை அவர்கள் சுதந்திரமாக பயன்படுத்த முடியும்." - என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.