விடுதலைப் புலிகளின் வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை மக்களிடம் கையளிக்கவே எதிர்பார்க்கின்றோம் எனவும், எனினும், அத்தாட்சி பத்திரங்கள் இல்லாத நகைகள் வடக்கு அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்கப்பட்டு அதற்கு வழங்கப்படும் எனவும் சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செல்வம் எம்.பி.,
சுட்டிக்காட்டிய விடயம் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
" ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே இராணுவம் வசம் இருந்த தங்கம், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவை சரியாக மதிப்பிடப்பட வேண்டும். இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர், மக்களுக்கு அவற்றை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும்." - எனவும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அத்தாட்சி பத்திரம் இல்லாத சில நகைகள் மிஞ்சும் என எதிர்பார்க்கின்றோம். அவற்றை வடக்கு அபிவிருத்தி நிதியமொன்று உருவாக்கப்பட்டு அதில் வைப்பிலிடப்படும். அந்த நிதியத்துக்கு அரசாங்கமும் நிதி வழங்கும். புலம்பெயர் மக்களும் பங்களிப்பு வழங்கலாம். அந்த நிதியம் ஊடாக வடக்கு கட்டியெழுப்படும். எது எப்படி இருந்தாலும் மக்களின் நகைகளை அவர்களுக்கு வழங்குவதிலேயே முன்னுரிமை வழங்கப்படும்" - என அவர் மேலும் கூறினார்.