பொறுப்பு கூறல் விவகாரத்தில் உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு இடமளிக்கும் வகையில் செப்டம்பர் மாத பிரேரணை அமைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடனும் கொழும்பு பேச்சு நடத்தவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். இந்த தகவலை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்ட அரச தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இதன்போதே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைப்புக்கான ஏற்பாடு, புதிய அரசியலமைப்பு, உள்ளக பொறிமுறையை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி மனித உரிமைகள் ஆணையாளருக்கு எடுத்துரைக்கப்படவுள்ளது.
சர்வதேச விசாரணைக்கு இலங்கை உடன்படாது என்பதால் உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், உறுப்பு நாடுகளிடம் இது பற்றி கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தரப்பில் கோரப்படவுள்ளது அறியமுடிகின்றது.
இலங்கை தொடர்பான புதிய பிரேரணையொன்று செப்டம்பர் மாத கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவுள்ள நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுடன் இலங்கை பேச்சு நடத்தவுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை, ஊழல்வாதிகளுக்கு எதிரான பாரபட்சமற்ற நடவடிக்கை என்பவற்றின் ஊடாக உள்ளக நீதிப்பொறிமுறை வலுப்படுத்தப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.
இலங்கை பயணத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் கொழும்பில் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவர், சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரையும் இவ்விஜயத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அதேவேளை, யாழ்ப்பாணம் ; மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் சென்று, நிலைமைகளை ஆராய உள்ளதுடன், போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கவுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் வடக்கு, கிழக்கு செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போது அவர்கள் சர்வதேச விசாரணையின் அவசியத்துவத்தை வலியுறுத்தவுள்ளனர். செம்மணி மனிதப்புதைகுழி, காணி ஆக்கிரமிப்பு, வழிபாட்டுதல ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் எடுத்துரைக்கவுள்ளனர்.
இலங்கை விஜயத்தில் சந்திப்புகள் முடிவடைந்த பின்னர் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றையும் நடத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்த நவநீதம்பிள்ளை அம்மையார், இதற்கு முன்னர் இலங்கை வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது அவர் முள்ளிவாய்க்கால் செல்வதற்கு முற்பட்டார் எனவும், அந்த கோரிக்கையை மஹிந்த அரசாங்கம் நிராகரித்தது எனவும் அப்போது தகவல்கள் வெளியாகின.