முள்ளிவாய்க்கால் பேரவலம் அரங்கேற அரச பயங்கரவாதத்துக்கு துணை நின்ற இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் அன்று எதிர்கொண்ட நிலையை இவ்விரு நாடுகளும் இன்று எதிர்கொண்டுவருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
'ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இறுதிப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொல்வதற்கு அரச பயங்கரவாதத்துக்கு உறுதுணையாக நின்றன. இதனை தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். குண்டுகளைப் போடுவதற்கும், தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை வழங்கி உறுதுணையாக இருந்தனர். இன்று அந்நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தம்மால் முடிந்த அழுத்தங்களை ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கை பிரயோகிக்க வேண்டும்." - என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.