யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் 'அணையா விளக்கு" போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பமானது.
செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ். வளைவை அண்மித்த பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டத்தின்போது 1996 இல் கொல்லப்பட்ட கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகநாதன் தலைமையில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டு, இதன்போது மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நீதி கோரினார்கள்.
அதனை தொடர்ந்து மத தலைவர்களின் ஆத்ம உரைகள் இடம்பெற்றன.
மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பும், இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடலும் இடம்பெறவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் இன்றும், நாளையும் நாளை மறுதினமும் என என மூன்று நாட்கள் அகிம்சை வழியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.