யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் வெங்கடாசலம் சுதர்சன் மாரடைப்பு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார்.
வைத்தியர் சுதர்சனின் இழப்பானது யாழ். போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று சக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் சுதர்சனின் மறைவு தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாகச் சேவையாற்றிய, உயர் திறமையுடன் கூடிய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன், இன்று திடீரென உயிரிழந்தார் என்ற செய்தி, மருத்துவ உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மருத்துவம் என்பது ஒரு சேவையாகவும், ஓர் ஒப்பற்ற தர்மமாகவும் இருந்த காலத்தில், மனிதாபிமானமும், உயிருக்காகப் போராடும் உறுதியும் கூடிய மருத்துவராக வைத்தியர் சுதர்சன் விளங்கினார்.
அவசர சத்திர சிகிச்சைகள், அரிய வகை அறுவை சிகிச்சைகள், மற்றும் மருத்துவக் கல்வி பயிற்சிகளில் அவர் செய்த பங்களிப்பு, யாழ். மருத்துவக் குடும்பத்தில் நீண்ட நாள் நினைவுகூரப்படும்.
அவரது பணிவும், நோயாளிகளுடன் கொண்ட நெருக்கமான உறவும், அவரை நோக்கி வரும் எதுவும் ஒரு "மருத்துவரின் மேன்மை" என்பதற்கான சான்றாக இருந்தது. மருத்துவ மாணவர்களிடையே அவர் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
மரண வாசல் அருகிலும் உயிரைக் காக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து பலரை மீட்டவர். அவரின் திடீர் மறைவு, யாழ். போதனா வைத்தியசாலைக்கும், இலங்கை மருத்துவத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் இருக்கின்றது.
அவரது குடும்பத்தாருக்கும், சக ஊழியர்களுக்கும், நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், உணர்வுபூர்வமான அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஒரு நல்ல மருத்துவர் ஆயுள் நீட்டிக்கின்றார்; ஆனால், ஒரு சிறந்த மருத்துவர் நம்பிக்கையை உயிராக்குகிறார். வைத்தியர் சுதர்சன் அந்தச் சிறந்தவர்களில் ஒருவராகவே இருந்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்." - என்றுள்ளது.
வைத்தியர் சுதர்சனின் இறுதிக்கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.