செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இன்று நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோருடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது அவர்கள் கூட்டாக மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கையில் பல்வேறு இடங்களில் மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மனிதப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.
தற்போது செம்மணி மனிதப் புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் 140 இற்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றுக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோரியும், சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வுப் பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.