கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபை தலைவர், பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
வெலிகம பிரதேச சபைக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இந்நாட்டில் பாதாளக்குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் பிளவுபட்டு காணப்படுகின்றன. அவற்றுக்கிடையில் மோதல் உள்ளது.
ஆயுதங்களும் உள்ளன. இன்றைய தினம் இடம்பெற்ற சம்பவமும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டதாகும்.
அவர் மக்கள் பிரதிநிதி என்றபோதிலும் பாதாள குழுவுடன் தொடர்புபட்டவர். அவருக்கு எதிராக ஆறு வழங்குகள் உள்ளன. சிறை தண்டனையைக்கூட எதிர்கொண்டவர். இவர் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. கொலைகளை நாம் அனுமதிப்பதில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகிறது." - என்றார்.