வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
" 216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவை சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாள குழுவை சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்." எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதாள குழுவை சேர்ந்தவர்களில் அதிகளவானோர் டுபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர். இவர்களை கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்டதுபோல எதிர்காலத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும்.
இந்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதற்கு நீதி அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுவருகின்றது." - என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.