திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சட்ட அனுமதி இன்றி நேற்று இரவு 8 மணியளவில் இந்தப் புத்தர் சிலை இந்த இடத்தில் வைக்கப்பட்டது. எனினும், இரவு 11 மணியளவில் துறைமுகப் பொலிஸார், திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் வந்து பெளத்த பிக்குகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றினர்.
பின்னர் இந்தப் புத்தர் சிலை துறைமுகப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று நண்பகல் வரை அங்கு வைக்கப்பட்டிருந்தது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களம், பெளத்த பிக்குமார், பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோர் கலந்துகொண்ட விசேட கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கியிருந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் மீளவும் புத்தர் சிலை, அகற்றப்பட்ட அதே இடத்தில் வைக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டு இதன்படி சிலை மீள வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்ட அனுமதி அற்ற சிற்றுண்டிச்சாலை நேற்று அகற்றப்பட இருந்தது. ஆனால், அதனை அகற்றுவது தொடர்பில் தடையாணை உத்தரவு ஒன்றை இந்தப் பகுதி பெளத்த பிக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்றிருந்தமையால் தாம் எதிர்பார்த்தபடி இன்று சிற்றூண்டிச்சாலை இடித்து அகற்றப்படவில்லை எனத் திருகோணமலை மாவட்ட கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரி தகவல் தெரிவித்தார்.
நேற்றுக் காலை முதல் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உற்பட அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளும், விசேட அதிரடிப் படையினரும் இங்கு பாதுகாப்புப் பணிகள் ஈடுபட்டிருந்தனர்.
புத்தர் சிலை மீளவும் வைக்கப்படுவதற்கு முன்னர் அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவுக்கு அங்கு திரண்டிருந்த பெளத்த பிக்குமார் உட்பட சிங்கள மக்கள் அவரின் வருகையை எதிர்த்துக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கடுமையாகக் கோஷமிட்டனர். இதனையடுத்து அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார்.
இது இவ்வாறிருக்க திருகோணமலை கடற்கரையில் மாநகர சபைக்குச் சொந்தமான பகுதியில் முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் பெளத்த வணக்கஸ்தலத்தில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும், இது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனத் தெரிவித்தும் திருகோணமலை மாநகர சபையின் மேயர் க.செல்வராஜா, துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை, திருகோணலை விவகாரத்தை இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம். இப்பிரச்சினையை அரசியல் மயப்படுத்தவும் இடமில்லை. சும்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினையை தீர்ப்போம். சில விடயங்களுக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு காணப்படும்என்று இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.