பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என நம்பப்படுகின்றது.
வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக யாங் வான்மிங் உறுதியளித்தார்.
இலங்கை உடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் சார்பில், சுமார் 82 ஆயிரம் டொலர் கொடையையும், அவர் வழங்கினார்.
டித்வா சூறாவளி உள்ளிட்ட அவசரகாலங்களின் போதான சீனாவின் தொடர்ச்சியான உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியாவும் சகல வழிகளிலும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.