1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று இரவு நடத்திய சோதனையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி அடிப்பாகம் கொண்ட பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில், ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புரவலர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்திற்கான விமானப் பயணச் சீட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 ஆம் நாள் பாங்கொக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட பௌத்த சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது, சாதாரண உடையில் இருந்த படங்கள் மற்றும் காணொளிகளும், அலைபேசிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக முதல் வழக்கு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்குகள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.