யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று நிறைவுக்கு வந்தது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம், இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதன்போது, சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகள் 'சூம்' தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுத்தீவு மகா வித்தியாலய மாணவியான வித்தியா கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் 'ட்ரயல் அட்பார்' நீதிபதிகள் குழாம், சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேரை குற்றவாளிகளாகக் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.
மேல் நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக் காலத்தில் குற்றவாளிகளில் ஒருவர் சிறைச்சாலையில் இருந்தபோது உயிரிழந்தார்.
அதேவேளை, மேன்முறையீட்டு விசாரணைகளின் அடிப்படையில், மேலும் இரு பிரதிவாதிகளைத் தண்டனையிலிருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட எஞ்சிய நான்கு பேருக்குமான மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
நீண்டகால சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.