யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இன்று சனிக்கிழமை அதிகாலைவேளையில் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியிலேயே தீப்பரவல் ஆரம்பமாகியுள்ளது.
தீயை அணைக்க வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மருந்து களஞ்சியசாலைக்குள் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய அசிட் மற்றும் ஏனைய இரசாயனப் பொருட்கள் காரணமாக தீ வேகமாகப் பரவியுள்ளது.
இதனால் பெருமளவிலான மருந்துகள் தீயிற்கு இரையாகியுள்ளதுடன், கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மருந்து களஞ்சிய சாலையைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.