கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) வெள்ளிக்கிழமை அனுமதித்துள்ளது.
யாழில் திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீத்சன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார்.
மேற்படி இசை நிகழ்வில் தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பாடல்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய நிலையில், குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக இவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில் இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது , தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணித்திருந்தார்.
அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக மீண்டும் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் , இளைஞனை இன்றைய தினம் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.