மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்காக நேற்று திறந்துவைக்கப்பட்ட புனர்வாழ்வு மையத்தின் கட்டிடம் முற்றாகச் சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புனர்வாழ்வு அலுவலகம் மற்றும் பிரதான அலுவலகம் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அமைதியின்மையானது இன்று காலை வரை நீடித்தது. சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கடற்படையினரின் கூட்டு ஒத்துழைப்புடன் நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்,” எனத் தெரிவித்தார்.