தற்போது தீவிரமடைந்து வரும் 'எல் நினோ” காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“கடந்த 75 வருடகாலங்களில் ஏற்பட்ட எல்நினோவைவிட இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
செப்டம்பர் மாதத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கையில் ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைவாக இருக்கும். இம்மாத இறுதியில் மழை படிப்படியாக அதிகரிக்கும்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழமையை விட அதிகமான மழைவீழ்ச்சியை நாட்டில் எதிர்பார்க்கின்றோம். டிசம்பர்வரை மழை நீடிக்கும்.
ஜனவரி மாதத்திற்குப் பிறகு மழைவீழ்ச்சி குறையும். அடுத்த ஆண்டின் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தை விட வறட்சியான வானிலை நிலவக்கூடும் என்பதால், நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
எல் நினோ நிலைமைகள் குறித்து ஆராய அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று தொடர்ச்சியாகக் கூடி, நிலைமைகளை மதிப்பீடு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
நினோ என்பது இலங்கைக்கு வெறும் வறட்சியை மட்டும் குறிக்காது. நாட்டின் பருவமழை சுழற்சிக்கு ஏற்ப அதன் தாக்கம் மாறுபடும்.
எல் நினோ காலப்பகுதியில் இலங்கையில் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலையும் ஒப்பீட்டளவில் உயர்ந்து காணப்படும்.” – என்றார்.